/

காவிரி விவகாரம்: காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :9 ஏப்ரல் 2018, 11:07 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லம்பாஷா தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் கதிர்வேல் முன்னிலை வகித்தார்.
உண்ணாவிரதத்தில் தமிழக விவசாயிகள், பொதுமக்களின் நலன்காக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 
மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது, தலித், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், கட்சி நிர்வாகிகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆம்பூரில்...
ஆம்பூர் சார்நிலை கருவூல அலுவலகம் எதிரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ச. பிரபு தலைமை வகித்தார்.  
ஆம்பூர் நகரத் தலைவர் சி.கே. பிரபு வரவேற்றார். முன்னாள் மாவட்டத் தலைவர் கலந்தரா பாலவரதன், நிர்வாகிகள் சரவணன்,  சோலூர் மாணிக்கம்,  கொத்தூர் மகேஷ், மின்னூர் சங்கரன், ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி  சார்பில், முத்துகடை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமை வகித்தார். 
நகர நிர்வாகிகள் பி.மோகன், கே.முருகன், வாலாஜா பூக்கடை மணி,  வி.நாகேஷ், மோகன சுப்பிரமணியம்  ஆகியோர்  முன்னிலை  வகித்தனர்.
 நகரத் தலைவர் வழக்குரைஞர் எஸ்.அண்ணாதுரை வரவேற்றார். கட்சியின் மாவட்ட முன்னாள் தலைவர் கே.எஸ்.சேகர் கண்டன உரை ஆற்றினார். 
இதில் அரக்கோணம் நாடாளுமன்ற துணைச் செயலாளர் அக்ராவரம் கே.பாஸ்கர், வி.சி. மோட்டூர் கணேசன், அரக்கோணம் நகரத் தலைவர் துரை சீனிவாசன், மகளிர் அணி தலைவி பி.சந்திரா, விஷாரம் நிஷாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குடியாத்தத்தில்...
வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவர் ஜெ.ஜோதி தலைமை வகித்தார்.
 குடியாத்தம் நகரத் தலைவர் கண்ணன், வடக்கு ஒன்றியத் தலைவர் எம்.வீராங்கன், தெற்கு ஒன்றியத் தலைவர் துரைசாமி, காட்பாடி ஒன்றியத் தலைவர் இளங்கோவன், மாவட்ட மகளிர் அணித் தலைவி ஜோதி, நிர்வாகிகள் வாசு, செல்வராஜ், காமராஜ், விஜயகுமார், விஜயேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.