பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் வேலூர் நேதாஜி மார்க்கெட் பகுதியில் கட்டப்படும் புதிய அடுக்குமாடி வணிக வளாகத்தில் தற்போதுள்ள கடைக்காரர்களுக்கு முன்னுரிமை அளித்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் வேலூர் அனைத்து வணிகர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, ரூ. 996 கோடியில் 12 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில், நேதாஜி மார்க்கெட்டை நவீன வசதிகளுடன் 2 அடுக்கு வணிக வளாகமாக மேம்படுத்தவும், ரூ. 80 கோடி மதிப்பில் 2 அடுக்குகளில் புதிய பேருந்து நிலையத்தை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அரசு ஒப்புதல் பெற்று வணிக வளாகம் கட்டும் பணி தொடங்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி வணிக வளாகத்தில் தற்போது நேதாஜி மார்க்கெட்டில் கடை நடத்தி வருவோருக்கு முன்னுரிமை அளித்து கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வேலூர் அனைத்து வணிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் ஆர்.பி.ஞானவேலு தலைமையில் நிர்வாகிகள், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையனிடம் மனு அளித்தனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் 732 மாத வாடகைக் கடைகளும், 300 தரைக்கடைகளும் இயங்கி வருகின்றன. இவற்றை நம்பி 5 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளன. இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் புதிதாக அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளது. அவ்வாறு கட்டப்படும் அடுக்குமாடி வணிக வளாகக் கடைகள் ஏலத்தின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படும். அதன்படி, ஏலத்தின் மூலம் கடைகள் ஒதுக்கப்பட்டால் தற்போது உள்ள கடைக்காரர்களுக்கு கடைகள் கிடைக்க வாய்ப்பில்லை. இதனால், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக்கூடும். எனவே, சிறப்புத் திட்டத்தை ஏற்படுத்தி புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடி வணிக வளாகத்தில் தற்போது கடை நடத்துவோருக்கு முன்னுரிமை அளித்து கடைகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதேபோல், திருப்பத்தூரைச் சேர்ந்த நர்ஸிங் கல்லூரி மாணவிகள் அளித்த மனுவில், ஆம்பூர் நர்ஸிங் கல்லூயில் கடந்த 2016-17-ஆம் ஆண்டு 23 பேர் பட்டயப் படிப்பு படித்தோம். அப்போது, பிரபல மருத்துவமனை மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தனர். இதை நம்பி ரூ. 70 ஆயிரம் பணம் செலுத்தினோம். தற்போது கல்லூரிக்கு அங்கீகாரம் இல்லை எனக் கூறி மாற்றுச்சான்றிதழ் அளித்து வெளியேற்றிவிட்டனர். வேறு கல்லூரியில் தொடர்ந்து படிக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதேபோல், வீட்டுமனைப் பட்டா, உதவித் தொகை, மின் இணைப்பு என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் குறைதீர் கூட்டத்தில் 276 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட சமூகப் பாதுகாப்பு திட்ட அலுவலர் பேபி இந்திரா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் கஜேந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளி தற்கொலை முயற்சி
வீடு இடிக்கப்பட்டதற்கு மாற்று இடம் தராததால் பாதிக்கப்பட்ட தொழிலாளி, வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய்யை குடித்து தற்கொலைக்கு முயன்றார். ரத்தினகிரியை அடுத்த கீழ்மின்னல் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். தொழிலாளியான இவருக்குச் சொந்தமான வீடு, நெடுஞ்சாலைத் துறை நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, கடந்த 2017 செம்டம்பர் 15-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, அவர் ஆற்காடு நெடுஞ்சாலைத் துறை இளநிலைப் பொறியாளர் அலுவலகத்திலும், காட்பாடி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்திலும் கேட்டபோது அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்ததாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அவர், ரத்தினகிரி மலையிலுள்ள புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனை ஒதுக்கக் கோரி வாலாஜாபேட்டை வட்டாட்சியரிடம் வலியுறுத்தினராம். அதற்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து வீடில்லாததால் சங்கர் தனது மனைவி, குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டராம்.
இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட சங்கர், ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்தார். தொடர்ந்து, அவர் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கழிப்பறை கட்டடம் அருகே மண்ணெண்ணெயைக் குடித்து மயங்கிக் கிடந்தார். அவரை போலீஸார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் வைத்திருந்த மனுவில், இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த மனுவை போலீஸார் மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையனிடம் அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய... புதிய இணையதள முகவரி!

சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

