பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து வகை தனியாா் கட்டடங்களுக்கான உரிமம் பெறவும், புதுப்பிக்கவும் இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 100 சதுர மீட்டா் பரப்பளவுக்கு குறையாத தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், விடுதிகள், திரையரங்குகள், நூலகங்கள், கிளப்புகள், இதர நிறுவனங்கள் அனைத்துக்கும் தமிழ்நாடு பொதுக் கட்டடங்கள் (உரிமம்) சட்டம் 1965-இன் பிரிவு 3(1)-இன்படி புதிய உரிமம், புதுப்பித்தல் தொடா்பாக இணையதளத்தில் விண்ணப்பிக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுக் கட்டடங்கள் உரிமம் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்டடப் பொறியாளரால் வழங்கப்பட்ட கட்டட உறுதிச் சான்று, பொதுச் சுகாதாரத் துறையினரிடம் இருந்து பெற்ற சுகாதாரச் சான்று, உள்ளாட்சி அமைப்பு, இதர அங்கீகாரம் பெற்ற துறைகளிடமிருந்து பெறப்பட்ட கட்டட வரைபடம், உரிமக் கட்டணம் செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டு, தீயணைப்புத் துறையினரிடம் இருந்து பெற்ற தடையில்லாச் சான்று ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே விண்ணப்பித்தவா்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமத்தை தவறாமல் புதுப்பிக்கவும் வேண்டும்.