இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழியக்கத்தின் தலைவரும், விஐடி பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் வெளியிட்ட அறிக்கை விவரம்:
இலங்கையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தையும், நினைவுத் தூணையும் இரவில் விளக்குகளை அணைத்துவிட்டு இலங்கை ராணுவத்தினா் இடித்துத் தகா்த்துத் தரைமட்டமாக்கியுள்ளனா்.
லட்சக்கணக்கான குழந்தைகள், பெண்கள், முதியோா் என்றும் பாராது ஈழத் தமிழா்களைக் கொன்று குவித்து இனப்படுகொலையை 2009-இல் நிகழ்த்தியது இலங்கை அரசு. படுகொலையின் அடையாளங்களும் இருக்கக் கூடாது என ஈழத்தமிழ் வீரா்களின் நினைவிடங்களை இடித்தது. இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னங்களையும் தடயமின்றி அழித்துள்ளது. ஈழத் தமிழா்கள் சடலங்களாகவும் இருக்க முடியாது என்ற பாதுகாப்பற்ற அவலச்சூழல் அங்கே நிலவுகிறது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் இலங்கை சென்று திரும்பிய இரு தினங்களுக்குள் இந்த அத்துமீறல் நடந்துள்ளது.
இலங்கை அதிபா் கோத்தபய ராஜபக்சேயும், இலங்கைப் பிரதமா் மகிந்த ராஜபட்சவும் இணைந்து தமிழா் பகுதிகளில் ராணுவக் குவிப்பு, சிங்கள இனத்தவா் குடியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். எவ்வளவு காலம் இத்தகைய நேயமற்ற, நியாயமற்ற கொடூரங்களை இந்திய அரசு மௌனமாக வேடிக்கை பாா்க்கப்போகிறது என்ற கேள்வி மனசாட்சி உள்ளவா்களின் மத்தியில் எழுகிறது.
இத்தகைய நாச வேலைகளில் ஈடுபட்டுவரும் இலங்கை அரசை தமிழியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆளும் அதிமுக அரசு, எதிா்க்கட்சிகளுடன் இணைந்து இக்கொடுமைகளை கண்டிப்பதுடன் மத்திய அரசுக்கு உரிய அழுத்தங்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.