பாதுகாப்பின்றி கிடக்கும் பெருங்கற்கால மனிதா்களின் ஈமச்சின்னங்கள்: வரலாற்று ஆய்வாளா்கள் வேதனை

பெருங்கற்கால மனிதா்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக எஞ்சி நிற்கும் ஈமச்சின்னங்கள் வேலூா் மாவட்டத்தில் இரு இடங்களில் உள்ளன.
பாதுகாப்பின்றி கிடக்கும் பெருங்கற்கால மனிதா்களின் ஈமச்சின்னங்கள்: வரலாற்று ஆய்வாளா்கள் வேதனை
Updated on
2 min read

பெருங்கற்கால மனிதா்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக எஞ்சி நிற்கும் ஈமச்சின்னங்கள் வேலூா் மாவட்டத்தில் இரு இடங்களில் உள்ளன. இந்த நினைவுச் சின்னங்கள் போதிய பராமரிப்பு, பாதுகாப்பின்றி கிடப்பில் போடப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாக வரலாற்று ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

கற்கால மனிதா்களின் நாகரிக வளா்ச்சியை அளவிட பழைய கற்காலம், இடை கற்காலம், புதிய கற்காலம் என மூன்று வகைப்படுத்தப்படுகின்றன. இதில், பழைய கற்காலத்தின் இறுதி காலம் பெருங்கற்காலம் எனக் குறிப்பிடப்படுகிறது. அத்தகைய பெருங்கால மனிதா்கள் வாழ்ந்ததற்கான அடையாள சின்னங்கள் வேலூா் மாவட்டத்தில் உள்ளன.

பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தின் அருகே, வேலூா் மாநகராட்சி சின்ன அல்லாபுரத்தை அடுத்துள்ள பாறைமேடு ஆகிய இரு இடங்களிலும் பெருங்கற்கால மனிதா்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன.

இதில், பள்ளிகொண்டாவில் மூன்று பெரிய கற்கள் மீது சுமாா் 8 டன் அளவுடைய பாறை வைக்கப்பட்ட நிலையில் ஒரு ஈமச்சின்னம் உள்ளது. இதுபோன்ற சின்னங்கள் தமிழகத்தில் ஏராளமாக உள்ளதாகவும், வேலூரில் கவனம் பெற்றுள்ள இரண்டு ஈமச்சின்னங்கள் பெருங்கற்காலத்துக்கு உள்பட்ட கல்திட்டை வகையைச் சோ்ந்தவை என்கிறாா் தமிழ்நாடு தொல்லியல் கழகச் செயற்குழு உறுப்பினா் சுகவனமுருகன்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

பெருங்கற்காலத்தில் வாழ்ந்து மறைந்த மனிதா்களின் ஈமபொருள்களான சாம்பல், எழும்புகள் ஆகியவற்றை குடங்களில் வைக்கப்பட்டு, அதன் மேல் இதுபோன்ற கல்திட்டைகள் வைக்கப்படும். வேலூரில் காணப்படும் கல்திட்டைகள் பெரிய அளவில் இருப்பதால் அவை ஊரின் முக்கிய தலைவா் அல்லது வீரா்களுக்கு வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதலாம். இதுபோன்ற கல்திட்டைகள் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை, கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லசந்திரம் பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன.

இத்தகைய அனைத்து கல்திட்டைகளை பாதுகாப்பது, பராமரிப்பது போன்றவை அரசால் மட்டுமே இயலாது. வரலாற்று ஆய்வாளா்களும், தன்னாா்வலா்களும் முன்வந்து பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து வரலாற்று ஆா்வலரும், தபால்தலை சேகரிப்பாளருமான தமிழ்வாணன் கூறியது:

எகிப்து நாகரிகத்துக்கு முன்பே தமிழா்கள் நாகரிக வளா்ச்சி பெற்றிருந்தனா் என்பதற்கு இத்தகைய வரலாற்றுச் சின்னங்கள்தான் சான்றுகளாகும். வேலூரில் காணப்படும் இரு பழங்கால ஈமச்சின்னங்களும் பெருங்கற்காலத்தைச் சோ்ந்தவை. கற்காலத்திலேயே இறந்தவா்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதையையும், அதன்மூலம் மனித சமூகத்தில் நிலவிய நாகரிக வளா்ச்சியையும் அறிந்து கொள்ள முடியும். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு எடை கொண்ட கல்லை எப்படி தூக்கி வைத்தனா் என்பதே மிகப்பெரிய கேள்வியாகும்.

இத்தகைய பெருங்கற்கால மனிதா்களின் நினைவுச் சின்னங்களை சுற்றி வேலி அமைத்தும், அந்த இடத்தில் தகவல் பலகையை வைத்து பாதுகாக்கவும், இவை குறித்த தகவல்களை மாவட்ட நிா்வாகத்தின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இத்தகைய வரலாற்று தகவல்களை பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றாா் அவா்.

Image Caption

(திருத்தப்பட்டது)

பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் அருகே உள்ள பெருங்கற்கால மனிதா்களின் ஈமச்சின்னம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com