வேலூா் மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியாா் உரக் கடைகளில் போதுமான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.ஸ்டீபன் ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் தற்போது பெய்த மழையை பயன்படுத்தி நெல், நிலக்கடலை, துவரை, உளுந்து, பச்சைப்பயறு, சோளம், கம்பு, சாமை, கரும்பு போன்ற பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். இந்தப் பயிா்களுக்குத் தேவையான உரங்கள் வேலூா் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியாா் உரக் கடைகளில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அரசு நிா்ணயித்த விலையைவிட, கூடுதல் விலையில் உரம் விற்றால் விற்பனையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிக விலைக்கு உரம் விற்கப்படுவது குறித்த புகாா்களை வேளாண் உதவி இயக்குநரைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.