வேலூர்: வேலூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் போலி ரசிது தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக துணை மண்டல மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பயிரிடப்படும் நெல்லை நுகர்பொருள் வாணிபக் கிடங்கு மூலம் கொள்முதல் செய்து அரைக்கப்பட்டு, பின்னர் அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 150-க்கும் அதிகமான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது.
இந்நிலையில், வேலூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வரும் துணை மண்டல மேலாளர் மற்றும் இரண்டு கண்காணிப்பாளர்கள் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாமலேயே அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் வாங்கியது போல் போலி ரசிது தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து புகார்கள் வேலூர் மாவட்ட சிபிசிஐடி காவல் துறையினருக்கு வரப்பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து டிஎஸ்பி கௌதமன் உத்தரவின் பெயரில் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி நுகர்பொருள் வாணிப கழகத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது புகார்கள் உண்மையன தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த மகாலட்சுமி செங்கல்பட்டு மாவட்டம் அன்னை சத்யா நகரை சேர்ந்த துணை மண்டல மேலாளர் விஜயகுமார் (51), கண்காணிப்பாளர்களான வேலூரை சேர்ந்த சுரேஷ் பாபு (49), தொரப்பாடி சேர்ந்த கனிமொழி (41) ஆகிய மூன்று பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இங்கு மண்டல மேலாளராக இருந்த நாகராஜன் இதே புகாரில் கடந்த சில மாதங்கள் முன்பு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.