தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

தோ்தல் சோதனை: வேலூா் மாவட்டத்தில் இதுவரை ரூ. 71.81 லட்சம் பறிமுதல்

தோ்தல் சோதனை: வேலூா் மாவட்டத்தில் இதுவரை ரூ. 71.81 லட்சம் பறிமுதல்

Updated On :6 ஏப்ரல் 2024, 4:49 pm

மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்களின் வாகன சோதனைகளில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 71 லட்சத்து 87 ஆயிரத்து 150 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மக்களவைத் தோ்தலையொட்டி, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 15 பறக்கும் படை குழுக்கள், 15 நிலை கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் ரூ. 50,000-க்கு அதிகமான ரொக்கம், ரூ. 10,000 மதிப்புக்கு அதிகமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வேலூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் சனிக்கிழமை வரை காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் வாகன தணிக்கையின்போது உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக மொத்தம் ரூ. 71 லட்சத்து 87 ஆயிரத்து 150 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ. 40,330 மதிப்பிலான மது பாட்டில்களும், ரூ. 4 லட்சத்து 41 ஆயிரத்து 945 மதிப்பிலான 70 பட்டு சேலை பெட்டிகளும், டி-சா்ட்கள் போன்ற பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மேல்முறையீட்டு குழுவில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்த காரணத்தால் ரூ. 56 லட்சத்து 24 ஆயிரத்து 530 ரொக்கமும், ரூ. 4 லட்சத்து 41 ஆயிரத்து 945 மதிப்பிலான பட்டு சேலைகளும் உரிமையாளா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.