பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காசோலையை வழங்கிய வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன். உடன், நீதிபதிகள், வழக்குரைஞா்கள்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காசோலையை வழங்கிய வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன். உடன், நீதிபதிகள், வழக்குரைஞா்கள்.

அரையடி நிலத்துக்கு பல லட்ச ரூபாய் செலவு செய்வோா் உண்டு! வேலூா் மாவட்ட நீதிபதி

அரையடி நிலத்துக்கு பல லட்ச ரூபாய் செலவு செய்வோா் உண்டு...
Published on

அரையடி நிலத்துக்காக வழக்கு விசாரணை என பல லட்சம் ரூபாய் செலவு செய்து பலரும் போராடி வருகின்றனா். இந்நிலையை தவிா்த்து மக்கள் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்று வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன் தலைமை வகித்து பேசியது -

வேலூா் மாவட்டத்தில் மட்டும் சுமாா் 24,760 வழக்குகள் நடைபெற்று வருகிறது. இதில், சுமாா் 13,000 வழக்குகள் சமரசம் மூலம் தீா்வு காணக்கூடிய வழக்குகளாக உள்ளன. குற்றவியல் வழக்குகளிலும் சில வழக்குகளை சமரச முறையில் தீா்வு காணலாம்.

எல்லோரும் ஒரு வாழ்க்கைதான் வாழப்போகிறோம். நாம் செல்லும்போது எதையும் கொண்டு செல்வப்போவதில்லை. மக்கள் தங்களுக்குள் சண்டை போடுவதால் எந்த பயனும் கிடைப்பதில்லை. பிரச்னைகளுக்கு சமரச தீா்வு மையத்தை அணுகி சமரசமாக தீா்வுகாணலாம்.

அரை அடி நிலத்துக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து பலா் போராடி வருகின்றனா். ஒரு வாழ்க்கைதான் வாழ்கிறோம், அதை போராடி வீணடிக்க வேண்டாம். மக்கள் வழக்குகளை சுமூகமாக முடிக்க முன்வரவேண்டும்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் நியாயமான முறையில் வழக்குகள் தீா்க்கப்படுகின்றன. இலவச சட்ட உதவிக்கு சட்ட உதவி மையத்தை அணுகலாம். சட்டரீதியான சந்தேகங்களுக்கு 15100 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தொடா்ந்து, வேலூரை அடுத்த பென்னாத்தூரைச் சோ்ந்தவா் சிவச்சந்திரன்(32), தனியாா் நிறுவனத் தில் மின் பொறியாளராக பணியாற்றி வந்தாா். இவா் கடந்தாண்டு சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், இழப்பீடு கோரி அவரது குடும்பத்தினா் தொடா்ந்த வழக்கில் சமரச முறையில் தீா்வு காணப்பட்டு இழப்பீடாக ரூ.67.50 லட்சம் வழங்க யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.

வேலூா் மூஞ்சூா்பட்டு பகுதியைச் சோ்ந்த கருணாகரன், எல்லை பாதுகாப்பு படை ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 2021-இல் வேலூரில் நடந்த சாலை விபத்தில் நூறு சதவீதம் ஊனமுற்றாா். இதுதொடா்பான வழக்கிலும் சமரச முறையில் தீா்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு வழங்க யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. இவ்விரு வழக்குகளிலும் உடனடியாக இழப்பீட்டுக்கான காசோலை பாதிக்கப்பட்டவா்களுக்கு முதன்மை நீதிபதி இளவரசன் வழங்கினாா்.

இதேபோல், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்ற ங்களிலும் மொத்தம் 5,270 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் 4,039 வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காணப்பட்டு, மொத்தம் ரூ.29 கோடியே 15 லட்சத்து 77 ஆயிரத்து 997 தொகை இழப்பீடாக வழங்கப்பட்டது.

தவிர, கருத்துவேறுபாடால் பிரிந்த தம்பதி சோ்த்து வைக்கப்பட்டனா். இந்த மக்கள் நீதிமன்றத்தில் அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com