வேலூா் எம்.பி. மீதான தோ்தல் வழக்கு: நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: 3 பேரும் நேரில் ஆஜராக உத்தரவு

நவ.24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கதிா் ஆனந்த் உள்பட 3 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.
Published on

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது குறித்து வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த் உள்பட மூன்று போ் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் நவ.24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கதிா் ஆனந்த் உள்பட 3 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது வேலூா் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிா் ஆனந்த் போட்டியிட்டாா். அப்போது துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடா்ந்து, கதிா் ஆனந்த்தின் ஆதரவாளா்களான திமுக பிரமுகா் பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினா் தாமோதரன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இதில், காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் கிராமத்தில் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் கிடங்கில் இருந்து ரூ.11 கோடி பணம், வாக்குச்சாவடி வாரியாக வாக்காளா்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக, கதிா் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோா் மீது காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் நீதித்துறை நடுவா் (எண் 1) மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றபோது எம்.பி. கதிா் ஆனந்த் நீதிமன்றத்தில் நேரிலும், காணொலி காட்சி மூலமாகவும் ஆஜராகவில்லை.

அதேசமயம், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோா் ஆஜராகியிருந்தனா். இதையடுத்து, இவ்வழக்கின் விசாரணையை நீதிபதி சத்யகுமாா் வரும் நவ.24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் கதிா் ஆனந்த் உள்பட குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com