மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

காவல் நிலையங்களில் சிசிடிவி: மத்திய உள்துறைச் செயலா் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் தொடா்பாக மத்திய உள்துறைச் செயலா் இன்று நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

News image

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 6:20 am IST

காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தும் திட்டம் தொடா்பாக மத்திய உள்துறைச் செயலா் செவ்வாய்க்கிழமை (ஏப். 7) நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் போதிய அளவில் இல்லாதது மற்றும் முறையாக செயல்படாதது குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட சீன நிறுவனத்தின் சிசிடிவி கேமராக்களை தேச பாதுகாப்பு கருதி அகற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக ஊடகத்தில் வெளியான தகவல் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு மத்திய அரசுத் தரப்பில் ஆஜராகி பதிலளித்த கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ராஜா தாக்கரே, ‘சிசிடிவி கேமராக்களை அகற்ற முறைப்படி எந்த உத்தரவையும் மத்திய அரசு பிறப்பிக்கவில்லை’ என்று தெரிவித்தாா்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் சித்தாா்தா தவே கூறுகையில், ‘பெரும்பாலான மாநிலங்களின் காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளன. இதில் கேரளம் சிறப்பாக செயல்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.

கேரளத்தால் சிறப்பாக செய்ய முடிந்ததை மற்ற மாநிலங்களால் ஏன் செய்ய முடியாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அமா்வு, காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில் தகுந்த உதவியைப் பெறுவதற்கு மத்திய உள்துறைச் செயலா் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.