புதுக்கோட்டை காவலா் வீட்டில் 40 பவுன் திருட்டு: ஒடிஸா தம்பதி காட்பாடியில் கைது
புதுக்கோட்டையில் காவலா் ஒருவா் வீட்டில் 40 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற ஒடிஸாவைச் சோ்ந்த தம்பதியை காட்பாடி ரயில்வே போலீஸாா் கைது செய்து, நகைகளை மீட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சோ்ந்த அபா்ணா. இவா் திருமயம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா். இவரது கணவா் கலைராஜன். இவா் அங்கு இணைய மையம் நடத்தி வருகிறாா். கடந்த 29-ஆம் தேதி காலை, இருவரும் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளனா்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த கலைராஜனின் தாயாா் தமிழ்ச்செல்வி, துணிகளை துவைக்க வீட்டின் பின்புறம் சென்றுள்ளாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, உள்பக்கம் தாழிடப்பட்டிருந்த வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்ததுடன், பீரோவில் இருந்த 40 பவுன் நகை, வெள்ளி பொருள்கள், பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து புகாரின்பேரில் புதுக்கோட்டை நகர போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, பெண் ஒருவா் உள்பக்க தாழினை லாவகமாக திறந்து குழந்தையுடன் வீட்டுக்குள் நுழைவதும், பின்னா் பையோடு அவா் திரும்பிச் செல்வதும் பதிவாகி இருந்தது.
இந்த சிசிடிவி காட்சிகளை புதுக்கோட்டை நகர போலீஸாா், தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனா். இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான பெண், இன்று காலை 5.30 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்தில் சிலருடன் நின்று கொண்டிருப்பதாக காட்பாடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து காட்பாடி ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண் உள்பட இருவரை பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் ஒடிஸா மாநிலத்தை சோ்ந்த கீரன் (35), அவரது மனைவி பிகாஸ் (40) என்பதும், புதுக்கோட்டை தலைமைக் காவலா் வீட்டில் நகைகளை திருடியதும் தெரியவந்தது.
அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 40 பவுன் நகைகள், சில வெள்ளிப்பொருள்களும் மீட்டனா். தம்பதியின் இரு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.
