நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுற்றுச்சூழலை காப்பது கடமை கழிவுக் கிடங்காகும் குளங்கள்!

கோவை, அக். 28: கட்டடக் கழிவுகள் கொட்டப்படுவதால் கோவையில் உள்ள  குளங்கள் கழிவுக் கிடங்குகளாக மாறி வருகின்றன. இதை சரிப்படுத்த வேண்டிய கோவை மாநகராட்சி கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது என்பது சுற்றுச்ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:02 pm

எம். ஆனந்த்

கோவை, அக். 28: கட்டடக் கழிவுகள் கொட்டப்படுவதால் கோவையில் உள்ள  குளங்கள் கழிவுக் கிடங்குகளாக மாறி வருகின்றன. இதை சரிப்படுத்த வேண்டிய கோவை மாநகராட்சி கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குமுறல்.

பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சிக்குளம், சிங்காநல்லூர் குளம், முத்தண்ணன்குளம், சுண்டக்காமுத்தூர் குளம், பேரூர் குளம், கிருஷ்ணாம்பதி, மாவுத்தம்பதி, கோளரம்பதி, வேடப்பட்டி குளம் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட குளங்கள் உள்ளன. மழைக்காலங்களில் இக்குளங்கள் நிறைந்து காட்சியளிக்கும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இக் குளங்கள் பராமரிப்பின்றி கழிவுநீர்க் குட்டைகளாகவும்,  கழிவுக் கிடங்காகவும் மாறிவருகின்றன.

குளங்களைப் பராமரிக்கும் பொருட்டு பொதுப்பணித் துறையிடமிருந்த குளங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் அண்மையில் கொண்டுவரப்பட்டன. ஆயினும் எந்தவிதப் பலனுமில்லை.

நகரின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் சாக்கடைக் கழிவு நீர் உக்கடம்- பெரியகுளத்தில் கலக்கிறது. சிறு தொழிற்கூடங்களில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள் சாயப்பட்டறைக் கழிவுகள், நகைப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் மெர்க்குரியும் கலந்துள்ளது. இப்படி பலவகையான கழிவுகள் இக் குளங்களில் கலக்கின்றன.

சில சமயம் மருத்துவக் கழிவுகளும் கொண்டுவந்து குளக்கரைகளில் கொட்டப்படுகின்றன. கேரள மாநிலத்துக்கு சரக்குகள் ஏற்றிச் செல்லும் லாரிகள் அங்கிருந்து திரும்பும்போது அங்குள்ள கழிவுகளை ஏற்றிவந்து இரவு நேரங்களில் வாலாங்குளத்தில் கொட்டிவிட்டுச் சென்றுவிடுகின்றன. இது போதாதென்று வீடுகளின் செப்டிக் டாங்க் கழிவுகளை லாரிகள் இரவு நேரத்தில் குளங்களில் கலந்துவிடுகின்றனர்.

இக் குளங்களில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்ற உள்ளாட்சி அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முயற்சி மேற்கொண்டன. ஆனால் எந்தப் பலனும் இல்லை. காரணம் கழிவுநீர் கலக்கும் வரை ஆகாயத்தாமரையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான்.

உக்கடம்- பெரியக்குளத்தின் கரையை மாட்டுத்தொழுவமாக உபயோகிக்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்தோர். அங்கு ஆக்கிரமிப்புகளையும் சிலர் செய்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

7 ஆண்டுகளுக்கு முன்புவரை, இக் குளங்களில் பெலிக்கன், கார்மோரண்ட், நைட்ஹெரான், பெயின்டட் ஸ்டார்க், எல்லோ பில்ட் ஸ்டார்க், ப்ளூ ஜக்கா என பல வகையான நீர்ப்பறவைகள் இங்கு முகாமிட்டன. அவற்றைப் பார்க்க குளக்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குளங்களில் கழிவுநீர் கலப்பதால் தற்போது இப் பறவைகள் வேற்றிடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டன.

சிங்காநல்லூர் குளத்தில் பல லட்சம் செலவில் படகுத்துறை அமைத்தும், யாருக்கும் எந்தப் பயனுமில்லை. அங்கும் தற்போது சாக்கடைக் கழிவுநீர் கலந்து, குளத்தை தாறடிக்கிறது.

இந்தக் குளங்களை சீராக்கி கழிவுநீர் கலக்காமல் முறையாகப் பராமரித்தால் படகுத்துறையாகவும் பறவைகள் வாழிடமாகவும், நகர மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாகவும் மாற்றலாம். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நல்ல சுற்றுச்சூழலை ஏற்படுத்துவது கோவை மாநகராட்சியின் கடமை. விழித்துக்கொள்ளுமா மாநகராட்சி நிர்வாகம்?

மின்சாரம் பாய்ந்து ஆண் யானை பலி

கோவை, அக்.28: மின்சாரம் தாக்கி ஆண் யானை வியாழக்கிழமை பலியான சம்பவம் இயற்கை ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கோவை இருட்டுப்பள்ளம் பகுதியில் வனத்தையொட்டி தனியார் பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டை சுற்றியுள்ள இடத்தில் விவசாயம் செய்யப்படுகிறது.

வனத்தைவிட்டு வெளியேறிய பெரிய தந்தத்தை கொண்ட 35 வயதுடைய ஆண் யானை பண்ணை வீட்டின் அருகே புதன்கிழமை இரவு நடமாடியது. யானைகள் உள்புகுவதை தடுக்கும் பொருட்டு, அந்த பண்ணையை சுற்றிலும் சூரிய மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. அந்த மின்வேலியை சூரிய மின்ஒளியில் இயக்குவதற்குப்  பதிலாக நேரடியாக உயர் அழுத்த மின்சாரத்தை அதில் பண்ணை உரிமையாளர் செலுத்தியுள்ளாராம். இந் நிலையில்தான், அந்த வேலியை யானை தனது தும்பிக்கையால் தொட்டபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தது.

 தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு, போளுவாம்பட்டி வனச் சரகர் பார்த்திபன், வனத் துறை மருத்துவர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். வனத் துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் யானை மின்சாரம் பாய்ந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து பண்ணை உரிமையாளர் ஜான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜான் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும், நேரடி மின்சார இணைப்புக்காக பயன்படுத்திய வயர்களும் கைப்பற்றப்பட்டன.

தொண்டாமுத்தூர், வெள்ளியங்கிரி ஆகிய பகுதிகளில் யானை புகுவதைத் தடுக்கும் பொருட்டு, சூரிய மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் சூரிய மின்வேலியை தகர்த்துக் கொண்டும் யானைகள் நுழைவதால், பெரும்பாலான விவசாயிகள் நேரடியான மின்சாரத்தை மின்வேலியில் செலுத்திவிடுகின்றனர் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

 அவர்கள் மேலும் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் மட்டும் மின்சாரம் தாக்கி 3 யானைகள் இறந்துள்ளன. வனத் துறையினர் எவ்வளவுதான் கேட்டுக் கொண்டாலும் சூரிய மின்வேலியில் நேரடி மின்சாரத்தை செலுத்துவதை விவசாயிகள் நிறுத்துவதாகத் தெரியவில்லை. மின்சாரம் வைத்து ஈவு இரக்கமின்றி கொல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வரை யானைகள் பலியாவதை யாராலும் தடுக்க முடியாது' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.