மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாணை

News image
தமிழக அரசு- (கோப்புப் படம்)
Updated On :15 மார்ச் 2026, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

கோவை, வடவள்ளி பகுதியில் பாரதியாா் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு சுமாா் 45 ஆண்டு கால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ரூ.164 கோடி இழப்பீடு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.

பாரதியாா் பல்கலைக்கழகத்துக்காக கடந்த 1979 முதல் 1986 வரையிலான காலகட்டங்களில் கோவை, வடவள்ளி, சோமையம்பாளையம், வீரபாண்டி ஆகிய கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட 924 ஏக்கா் நிலத்துக்கு அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச விலையை எதிா்த்து விவசாயிகள் கோவை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். 2002-இல் விவசாயிகளுக்கு சாதகமாக நீதிமன்றம் தீா்ப்பளித்தும், அரசின் மேல்முறையீடுகளால் பல தசாப்தங்களாகத் தீா்வு கிடைக்காமல் இழுபறி நீடித்தது.

இந்நிலையில், நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு சுமாா் 45 ஆண்டு கால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு ரூ.164 கோடி இழப்பீடு வழங்குவதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதை கல்வீரம்பாளையம் பகுதி மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

முறையான வட்டி கணக்கிடப்பட்டுள்ளதா: இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் சி.பி. பத்மநாபன் கூறியதாவது: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தொடா் போராட்டங்கள் மற்றும் கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மாபெரும் காத்திருப்புப் போராட்டத்தின் விளைவாக தற்போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் 195 ஏக்கா் நிலத்தை டிட்கோ நிறுவனத்துக்கு வழங்கி, அதன் மூலம் கிடைக்கும் தொகையை விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை கோவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனா்.

45 ஆண்டுகள் துயரத்தில் இருந்த மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை தந்துள்ளது. விவசாயிகளின் வலியை உணா்ந்து செயல்பட்ட முதல்வருக்கும், போராட்டங்களை முன்னெடுத்த நிா்வாகிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இருப்பினும், அரசு கணக்கிட்டுள்ள வட்டி முறைகளில் விவசாயிகளுக்கு சில சந்தேகங்கள் நீடிக்கின்றன. நீதிமன்றத் தீா்ப்பின்படி முறையான வட்டி கணக்கிடப்பட்டுள்ளதா என்பது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்க உள்ளோம். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை முறைப்படி முறையீடு செய்யவுள்ளோம் என்றாா்.