அஞ்சலக வார விழாவையொட்டி மேட்டுப்பாளையத்தில் காலம் கடந்த கடிதங்கள், தபால் தலை கண்காட்சி நடைபெற்றது.
அஞ்சல் துறை சார்பில் இந்தியா முழுவதும் அக்டோபர் 9 முதல் 12-ஆம் தேதி வரை அஞ்சலக வாரம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சலகத்தில் அக்டோபர் 9-ஆம் தேதி உலக அஞ்சல் தினம், 10-ஆம் தேதி சேமிப்பு நாள், 11-ஆம் தேதி அஞ்சலக காப்பீட்டு நாள் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிலையில், காலம் கடந்த கடிதங்கள், தபால் தலை கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை அஞ்சலகர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் நவரத்தன்மல், மாவட்ட அரிமா சங்கத் தலைவர் பி.என் ராஜேந்திரன், ரோட்டரி முன்னாள் தலைவர் ஸ்டீபன், அஞ்சல் மக்கள் குழும உறுப்பினர் ஹபிபுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் தொடர்பு அலுவலர் பழனிசாமி வரவேற்றார்.
திருப்பூர் கோட்ட அஞ்சல் துறை உதவிக் கண்காணிப்பாளர் கோபாலன் கண்காட்சியைத் துவக்கிவைத்தார். கண்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட தபால் தலை சேகரிப்பாளர்கள், பொதுமக்கள் சார்பில் 1909-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட பழைமை வாய்ந்த கடிதங்கள், தபால் தலைகள், கடித உறைகள், தந்திகள் என 500-க்கும் மேற்பட்ட பழமையான ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
முதன்மை தபால் தலை சேகரிப்பாளர் டாக்டர் ஜான் சுந்தரராஜ் தலைமையில் நடுவர்கள் பங்கேற்று சிறந்த, பழமையான ஆவணங்களை தேர்வு செய்தனர். இதில், வடவள்ளி தங்கவேலு வைத்திருந்த 1909-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் கால தபால் அட்டை முதல் பரிசையும், கோவை ஹரிஹரன் வைத்திருந்த 1944-ஆம் ஆண்டு கடிதம் 2-ஆம் பரிசையும், மேட்டுப்பாளையம் ஹசன் வைத்திருந்த கடிதம் 3-ஆம் பரிசையும் வென்றன.
நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள் ரூபன் சுகுமார், ராமசாமி உள்பட அஞ்சல் துறையின் மக்கள் குழும உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். உதவி அஞ்சலக அலுவலர் நாகஜோதி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.