கோவை காருண்யா தொழில்நுட்பம், அறிவியல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 3 நாள்கள் நடைபெறும் வேளாண் மாநாட்டை மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், பஞ்சாயத்துராஜ் துறை இணையமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.
காருண்யா பல்கலைக்கழகத்தில், வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், உயிரி தொழில்நுட்பத் துறைகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பிலான 3 நாள்கள் சர்வதேச மாநாடு புதன்கிழமை தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டின் தொடக்க விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர் தலைமை தாங்கினார்.
இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கிவைவத்து அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பேசியதாவது:
இந்திய வேளாண்மைத் துறைக்கு நவீனத் தொழில்நுட்பங்களின் தேவை அதிகரித்துள்ளது. ஜி.பி.எஸ்., ஜி.ஐ.எஸ்., ஐ.ஓ.டி. உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வது தொடங்கியுள்ளது. சொட்டு நீர்ப் பாசன முறைகளை தீவிரமாக செயல்படுத்துவதில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. நுண்ணீர் பாசனம், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக அரசு முடிவு செய்துள்ளது. அரசின் நோக்கத்தை விரைவுபடுத்த இதுபோன்ற மாநாடுகள் உதவும் என்றார்.
இஸ்ரேல் நாட்டு ஆராய்ச்சியாளர் இத்தமார், டெக்னியோன் பல்கலைக்கழக பேராசிரியர் இட்சாக், யோரம் ஓரன், ஹவாங்க் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று கட்டுரைச் சமர்ப்பித்தனர். இஸ்ரேல், கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வேளாண் ஆராய்ச்சியாளர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். இணை துணைவேந்தர் ரிட்லிங் மார்கரெட், பதிவாளர் எலிஜா பிளசிங் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.