காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: 48 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர் பெருமன்றத்தினர் 48 பேரை போலீஸார் கைது செய்தனர்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர் பெருமன்றத்தினர் 48 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் வசந்தகுமார், செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட மக்கள் விரோதத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினருக்கும், காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை காவல் துறையினர் கீழே தள்ளிவிட்டதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தடையை மீறிப் போராட்டம் நடத்தியதாக 9 பெண்கள் உள்பட 48 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தனியார் கல்வி நிறுவனங்களின்
கட்டணக் கொள்ளை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை, எளிய மாணவர்களுக்கு அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் 25 சதவீதம் இலவசக் கல்வி வழங்கவேண்டும். ஆனால், பல கல்வி நிறுவனங்கள் வெளிப்படையாகச் செயல்படுவதில்லை. இதுகுறித்து முழுமையான ஆய்வு செய்து நலிந்த பிரிவினருக்கு இலவசக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.
மேலும், விண்ணப்பிக்கும் தேதி மே 18 கடைசி நாள் என்பதை ஜூன் 15 வரையில் கால நீட்டிப்புச் செய்யவேண்டும். பெரும்பாலான தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர நன்கொடை, சிறப்பு வகுப்பு என பல்வேறு வகைகளில் கட்டண வசூலில் ஈடுபடுகின்றனர்.
இதில் அரசு விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும். மாணவர்களின் வருகைக் குறைவை காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விவசாயிகள் போராட்டம்: வேளாண் விளை பொருள்களை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யவும், மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கவும் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, சிங்காநல்லூர், சுந்தராபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன.
இதில், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தைக்கு விவசாயிகளும், பொதுமக்களும் அதிக அளவில் வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் தங்களது சங்கத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயியை, விளை பொருள்களை விற்பனை செய்ய அனுமதிக்காமல் தடுத்ததுடன், அவரைத் தாக்கியுள்ளனர். இதேபோல மேலும் சில விவசாயிகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உழவர் சந்தைகளில் அதிகாரிகள் விதிமீறல்களில் ஈடுபடுவது குறித்துப் புகார் செய்யும் விவசாயிகளைப் பழிவாங்கும் போக்குடன், சந்தையில் இருந்து வெளியேற்றுகின்றனர். இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
எனவே, வேளாண் விளைபொருள்களை உழவர் சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காய்கறிகளை விற்பனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...