கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி துப்புரவுத் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை, சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் சிஎம்சி காலனியை சேர்ந்தவர்கள் முருகன்(30), பாண்டிதுரை(27). உறவினர்களான இவர்கள் இருவரும் துப்புரவுத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். முருகனுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளும், பாண்டிதுரைக்கு திருமணமாகி ஐந்து மாதங்களும் ஆகின்றன.
இந்நிலையில், சிங்காநல்லூர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு கழிவுநீர்த் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் முருகன் மற்றும் பாண்டிதுரையைத் தொடர்பு கொண்ட திருநகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்து தரக் கூறியுள்ளனர்.
இதன்படி கழிவுநீர் தொட்டிக்குள் செவ்வாய்க்கிழமை மாலை பாண்டிதுரை இறங்கியபோது விஷவாயு தாக்கி உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற முயற்சித்த முருகனும் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக திருநகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து சிங்காநல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை: ஏ.ஐ.டி.யூ.சி. ஜீவா உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.செல்வராஜ் கூறியதாவது:
கோவை, சிங்காநல்லூர் அருகே திருநகர் குடியிருப்பு பகுதியில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் முருகன் (37), பாண்டித்துரை (29) ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். இவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான திருநகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகத்திடம் இருந்து வேலையாள் இழப்பீட்டு சட்டத்தின்படி தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் வசூலித்து இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கவேண்டும். மேலும் தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் என மொத்தம் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், குடியிருப்போர் நலச் சங்கத்தினர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304ன் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சரவையில் விசிக! திருமாவளவன் அறிவிப்பு! | VCK | TVK
பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!

Podcast | TVK அமைச்சரவை விரிவாக்கம்: தனித்துவிடப்படும் DMK | Epi - 38 | News and Views





