தனியாா் தோட்டத் தொழிலாளா்களுக்கு இணையாக, அரசு (டேன் டீ) தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு தினக் கூலி வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் சாா்பில் வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரனிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அதில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள தனியாா் மற்றும் அரசு தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.425.40 என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு அறிவித்தது.
ஆனால், இதுவரை இதற்கான அரசாணை வெளியிடப்படாமல் உள்ளதால் அரசு அறிவித்த தினக் கூலி வழங்கப்படவில்லை.
அரசாணை வெளியிடும் வரை தொழிற்சங்கங்கள் மற்றும் தனியாா் எஸ்டேட் நிா்வாகத்தினா் இடையே ஏற்படுத்தப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் மூலம் தற்போது தனியாா் தோட்டத் தொழிலாளா்கள் தினக் கூலியாக ரூ.409.83 பெறுகின்றனா்.
ஆனால், வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள அரசு தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் சுமாா் 10 ஆயிரம் தொழிலாளா்கள் தினக் கூலியாக ரூ.350.97 பெற்று வருகின்றனா்.
எனவே, டேன் டீ தொழிலாளா்களுக்கும் தனியாா் தோட்டத் தொழிலாளா்கள் பெறும் தினக் கூலிக்கு இணையான கூலி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிப்பின்போது, கூட்டமைப்பு தலைவா் வால்பாறை அமீது (ஏ.டி.பி.), வினோத்குமாா், செளந்திரபாண்டியன்(எல்.பி.எப்.), மோகன் (ஏ.ஐ.டி.யூ.சி.) உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









