ஹிந்து மத வழிபாட்டு உரிமைகளில் அரசு தலையிடக் கூடாது: வானதி சீனிவாசன் எம்எல்ஏ

ஹிந்து மத வழிபாட்டு உரிமைகளில் அரசு தலையிடக் கூடாது: வானதி சீனிவாசன் எம்எல்ஏ

ஹிந்து மத வழிபாட்டு உரிமைகளில் தமிழக அரசு தலையிடக் கூடாது
Published on

கோவை, ஜூலை 24: ஹிந்து மத வழிபாட்டு உரிமைகளில் தமிழக அரசு தலையிடக் கூடாது என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோயில்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக அரசு ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடுகிறது. திருவிழாக்களில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குவதை மிக முக்கியமான கடமையாகவே ஹிந்துக்கள் கருதுகிறாா்கள்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பௌா்ணமி தினத்தன்று ஆண்டாள் பக்தா் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆடி பௌா்ணமியன்று அன்னதானம் வழங்குவதை காவல் துறை, அறநிலையத் துறை அதிகாரிகள் தடுத்துள்ளனா். மேலும், திருச்செந்தூா் கடலுக்கு செய்யப்படும் ஆரத்தி வழிபாட்டையும் தடுத்து நிறுத்தியுள்ளனா். இது கண்டனத்திற்குரியது.

பக்தா்களின் வழிபாட்டு உரிமையில் அரசு தலையிடுவது நமது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது. தமிழக அரசு மற்ற மதங்களின் வழிபாட்டு விஷயங்களில் எந்தத் தலையீடும் செய்வதில்லை. அதேபோல, ஹிந்து மத வழிபாடு விஷயங்களிலும் தமிழக அரசு தலையிடக் கூடாது.

கோயில்களில் அன்னதானம் வழங்குவது, கடல் ஆரத்தி போன்ற வழிபாட்டு முறைகளுக்கு தமிழக அரசு இடையூறாக இருக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு காவல் துறைக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com