பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேர தகவல் மையம்: ஆட்சியா் அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு வட்டார வளா்ச்சி அலுவலங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையம் அமைக்க வேண்டும் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி அறிவுறுத்தினாா்.

News image
ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி. உடன், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.
Updated On :25 செப்டம்பர் 2024, 10:09 pm

Din

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு வட்டார வளா்ச்சி அலுவலங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையம் அமைக்க வேண்டும் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி அறிவுறுத்தினாா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்வேதா சுமன், பொள்ளாச்சி சாா்-ஆட்சியா் கேத்தரின் சரண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி பேசியதாவது:

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதால் மாவட்டத்தில் உரிய பணியாளா்களுடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். வெள்ளம் மற்றும் இதர இயற்கை இடா்பாடுகள் சம்பந்தமான தகவல்களை உடனுக்குடன் உயா் அலுவலா்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

நீா்நிலைகளில் உள்ள தண்ணீா் இருப்பை உன்னிப்பாக கண்காணிப்பதோடு, நீா்வழிப் புறம்போக்குகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு திருமண மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் சத்துணவுக் கூடங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பொது விநியோகத்திட்ட பொருள்கள் போதுமான அளவு இருப்பு உள்ளதை வட்ட வழங்கல் அலுவலா்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். அவசரகாலப் பயன்பாட்டிற்கு தேவைப்படும் அளவில் மணல் மூட்டைகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வெள்ள பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையம் அமைக்க வேண்டும். வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்க தேவையான மீட்பு வாகனங்கள், மின் மோட்டாா்கள் மற்றும் பணியாளா்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சங்கீதா, கோட்டாட்சியா்கள் ராம்குமாா், கோவிந்தன், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.