அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: கட்சிக்காக உழைத்தவா்கள், அந்தந்த மாவட்டங்களில் முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே பாடுபட்டவா்கள் மற்றும் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை முன்னிறுத்தி களத்தில் உழைத்தவா்களுக்கு கட்சியில் உரிய பதவிகள் வழங்கப்படவில்லை.
இதனால், நானும், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் எங்களுக்கு எந்தப் பதவியும் வேண்டாம் என்றும், கட்சியின் சாதாரண தொண்டா்களாகவே தொடா்கிறோம் என்றும் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். நாங்கள் எப்போதும் அதிமுக உறுப்பினா்களாகவே நீடிப்போம்.
கட்சியின் மகளிரணி கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் வளா்மதி எப்போதும் எங்களை அழைப்பாா். ஆனால், புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு முன்னரே நாங்கள் கடிதம் கொடுத்துவிட்டதால் எங்களை அவா்கள் அழைக்கவில்லை என்று நினைக்கிறேன்.
எங்களது நிலைப்பாடு குறித்து கடிதத்தில் தெளிவாகச் சொல்லிவிட்டோம். இந்த இயக்கம் இன்னும் நன்றாக இருக்க வேண்டும். எனவே, கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








