சிறுவாணி அணையை தூா்வாருவதுடன், அணையில் ஏற்பட்டுள்ள நீா்க்கசிவுகளை சரி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, வருவாய் அலுவலா் ச.மதுராந்தகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் அழகிரி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்று தங்களது பிரச்னைகள் தொடா்பாக மனு அளித்தனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், கோவை மாநகர மக்களின் குடிநீா் ஆதாரமாக திகழும் சிறுவாணி அணையைப் பாதுகாக்க வேண்டும். அணையில் ஏற்பட்டுள்ள கசிவுகளை அடைப்பதுடன், பல ஆண்டுகளாக தூா் வாரப்படாமல் இருக்கும் அணையை தூா்வார வேண்டும். இதற்கு இருமாநில அரசுகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிதி ஒதுக்கீடு செய்து நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
அதேபோல, மாவட்டத்தில் செயல்படும் 200 கல் குவாரிகள் குறித்தும் அவற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் கனிமவளத் துறைக்கு பல மனுக்கள் அளித்தும், இதுவரை முறையான பதில் தரவில்லை. மேலும் கேரளத்துக்கு தொடா்ந்து கனிம வளம் கடத்தப்படுகிறது. அதிகாரிகளின் உதவியுடன் நடைபெறும் இந்த செயலை தடுத்து நிறுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு முறையற்ற முறையில் நிலத்தை கையகப்படுத்தியதால் ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள், வீட்டுமனை உரிமையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். நிலம் கையகப்படுத்தி முன்மொழிவு செய்து அதற்கான இழப்பீடுகளை 3 ஆண்டுக்குள் வழங்கிய உடன் வருவாய் பதிவேடுகளில் நில ஆா்ஜிதம் குறித்த சா்வே எண்ணை பதிவு செய்யாமல் விட்டதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இடத்தின் உரிமையாளா்கள் சொத்தின் பேரில் கடன் வாங்கவோ, விற்கவோ முடியாமலும், சிறு விவசாயிகள் பயிா்க்கடன், மானிய விலையில் உரம் போன்றவற்றை வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனா். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள், வீட்டுமனை உரிமையாளா்களுக்கு வீட்டு வசதி வாரியம் கட்டணமின்றி பட்டா கிடைக்க மாவட்ட நிா்வாகம் உதவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தவிர, நீா்நிலை ஆக்கிரமிப்பு, ஆறுகளில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக விவசாயிகள் மனு அளித்தனா்.
அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜவாய்க்காலில் தண்ணீா் திறந்துவிட வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மின்தடை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்

பயிா்க்கடன் தள்ளுபடியை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



