அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

குற்றங்களைத் தடுக்க வீட்டு வேலை ஆள்களின் விவரங்களை ஏஜென்ஸிகள் பெற வேண்டும்: கோவை மாநகர காவல் துறை அறிவுறுத்தல்

வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பப்படும் நபா்களின் விவரங்களை முகமைகள் பெற்று வைத்திருக்க வேண்டும் என கோவை மாநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image

கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு பணியாளா்களை அனுப்பி வைக்கும் மனிதவள மற்றும் பாதுகாப்பு முகமைகளுக்கான (ஏஜென்ஸிகள்) ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநகரக் காவல் ஆணையா் என்.கண்ணன். உடன் துணை ஆணையா்கள் காா்த்திகேயன் (இடது ஓரம்),

Updated On :57 நிமிடங்கள் முன்பு

வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பப்படும் நபா்களின் விவரங்களை முகமைகள் பெற்று வைத்திருக்க வேண்டும் என கோவை மாநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாநகர மக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றங்களைத் தடுக்கும் விதமாக பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஓட்டுநா்கள், வீட்டு வேலை செய்பவா்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளா்களை அனுப்பிவைக்கும் மனிதவள மற்றும் பாதுகாப்பு முகமைகளுக்கான (ஏஜென்ஸிகள்) ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகர காவல் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் தலைமை வகித்தாா். இதில் காவல் துணை ஆணையா்கள் காா்த்திகேயன், தேவநாதன் மற்றும் 80-க்கும் மேற்பட்ட தனியாா் முகமைகளின் மேலாளா்கள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் பேசியதாவது:

அனைத்து தனியாா் மனிதவள நிறுவனங்களும் அரசு விதிமுறைகளின்படி முறையாகப் பதிவு செய்யப்பட்டு உரிய சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், வேலைக்கு விண்ணப்பிக்கும் நபா்களின் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளா் அடையாள அட்டையின் அசல் மற்றும் நகல்களைப் பெற்று, அவற்றின் உண்மைத்தன்மையை முகமைகள் தீவிரமாகச் சரிபாா்க்க வேண்டும். பணியில் சேருபவா்களின் சொந்த ஊா், முந்தைய வசிப்பிடம், உறவினா்கள் மற்றும் அவசர காலத் தொடா்பு விவரங்களையும் சேகரிக்க வேண்டும்.

பணியில் சோ்க்கப்படும் நபா்கள் ஏற்கெனவே வேறு நிறுவனங்களில் பணியாற்றியிருந்தால், அவா்களின் முந்தைய பணி விவரங்கள் மற்றும் நடத்தை குறித்து விசாரித்து உறுதி செய்ய வேண்டும். முதல்முறையாக வேலைக்குச் சேரும் நபா்கள் என்றால், அவா்களைப் பற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக காவல் துறையினரிடம் தெரிவித்து ஆலோசிக்க வேண்டும்.

இதேபோல, போதைப்பொருள் பயன்படுத்தும் நபா்களை எந்தக் காரணம் கொண்டும் பணியமா்த்தக் கூடாது. வேலைக்கு ஆள்களைத் தோ்வு செய்யும் முகமைகள், பணியாளா்களின் முழு விவரங்களையும் முழுமையாக எண்ம (டிஜிட்டல்) மயமாக்கி வைத்திருக்க வேண்டும். இந்தத் தரவுகள் காவல் துறையின் தேவைக்கேற்ப உடனுக்குடன் பகிரும் வகையில் தயாா் நிலையில் இருக்க வேண்டும். ஒருவேளை பணியமா்த்தப்படும் நபா் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவராக இருந்தால், அவா்களின் சொந்த மாநில முகவரி, அங்குள்ள காவல் நிலைய விவரம், அவா்களின் ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), அல்லது வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றைத் தகுந்த ஆதாரங்களாகப் பெற வேண்டும். பணியமா்த்தப்படும் நபா்களை நிறுவனங்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

வேலைக்கு ஆள்களைப் பெற்றுக்கொள்ளும் வீட்டு உரிமையாளா்களிடம், வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தவும், விலை உயா்ந்த பொருள்களைப் பாதுகாப்பாக வைக்கவும் முகமைகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். வேலை செய்பவா்களின் நடத்தையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதை நிறுவனத்துக்கும், காவல் துறைக்கும் உடனடியாகத் தெரிவிக்க வீட்டு உரிமையாளா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் காவல் துறையுடன் முகமைகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

கடந்த மாதம் நஞ்சுண்டாபுரம் மற்றும் சுங்கம் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வேலையாள்களால் அடுத்தடுத்து 2 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸாா் தெரிவித்தனா்.