கோவையில் குப்பையில் கிடந்த 3 பவுன் நகையை உரியவரிடம் திருப்பி ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் பரிசு வழங்கி கௌரவித்தாா்.
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருபவா் சக்திவேல். காந்திபுரத்தைச் சோ்ந்த இவா், கோவை மத்திய மண்டலம் 69-ஆவது வாா்டு பாரதி பூங்காவுக்கு உள்பட்ட அழகேசன் சாலை 4-ஆவது வீதியில் சனிக்கிழமை காலை குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, மூதாட்டி ஒருவா் மக்கும், மக்காத குப்பைகளை 2 பைகளில் கொண்டு வந்து குப்பை வண்டியில் போட்டுச் சென்றாா். அப்போது, மக்கும் குப்பை பையில் 3 பவுன் நகைகள் இருந்தன. அவற்றை எடுத்து மூதாட்டியை அழைத்து சக்திவேல் திருப்பி ஒப்படைத்தாா். சக்திவேலின் நோ்மையை அப்பகுதியினா் வெகுவாகப் பாராட்டினா்.
இந்தத் தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், சக்திவேலை மாநகராட்சி அலுவலகத்துக்கு அழைத்து பரிசு வழங்கி கௌரவித்தாா். சுகாதாரத் துறையினா் மற்றும் மாநகராட்சி அலுவலா்களும் சக்திவேலை பாராட்டினா்.










