உலகில் பெருகி வரும் துன்பங்கள், கொடுமைகள் குறைய ஒருவரையொருவர் நேசிக்கும் அன்பை வளரும் தலைமுறைக்கு சிறு வயது முதலே பெற்றோர் கற்றுத் தர வேண்டும் என்று, மாதா அமிர்தானந்தமயி தெரிவித்தார்.
பவானி கூடுதுறைக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சீடர்கள் 500-க்கு மேற்பட்டோருடன் புதன்கிழமை மாலை வருகை புரிந்த அமிர்தானந்தமயி மடத்தின் நிறுவனர் மாதா அமிர்தானந்த மயி தேவி, சிறப்புப் பாடல் மற்றும் பஜனை வழிபாடு நடத்தினார்.
இதையடுத்து, அவர் பக்தர்களிடையே பேசியது:
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாழ்க்கை நெறியுடன் வாழ நற்சிந்தனை, செயல்கள் மிகவும் அவசியம். பிறருக்கு உதவும் உள்ளம், மனிதநேயத்தை குழந்தைகளை வளர்க்கும் போதே கற்றுத் தர வேண்டும். அப்போது தான் உலகில் அன்பும், அமைதியும் தழைக்கும். சட்டங்களால் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது அவசியம் என்றாலும், தனி மனித ஒழுக்கமே தேவையானது.
குடிப்பழக்கம் மனிதனைக் கெடுத்து விடுகிறது. இதனால், காலையில் எழுந்தவுடன் எண்ணம், சிந்தனை மதுவை நோக்கி ஓடும் நிலை உருவாகி விடுகிறது. இதனால், பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. உடல்நலம் பேண மதுவைத் துறக்க வேண்டும். உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தினால் அமைதி பிறக்கும் என்றார்.
தொடர்ந்து, காவிரி படித்துறையில் அமர்ந்து சிறப்பு பஜனை, வழிபாடு நடத்தினார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுதில்லியில் வரும் 11-ம் தேதி நடைபெறும் சுவாமி விவேகானந்தரின் 150-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக, கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட மாதா அமிர்தானந்தமயி, பெங்களூர் செல்லும் வழியில் பவானி கூடுதுறைக்கு வருகை புரிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.