பவானி அருகே ஈமச்சடங்குக்கு சென்றபோது தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து மகன் கந்தசாமி (52). அப்பகுதியில் முடி திருத்தும் நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவர், தனது மகன் சதீஷ்குமாருடன் புதன்கிழமை மாலை பவானி ஆற்றங்கரையில் உள்ள தளவாய்பேட்டையில் இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கில் பங்கேற்க சென்றார்.
அப்போது, பழைய துணிகளை போட்டு எரித்தபோது கிளம்பிய புகையால் அருகிலிருந்த மரத்தில் தேன் கூட்டிலிருந்து தேனீக்கள் கூட்டம் கூட்டமாக பறந்ததோடு, ஈமச் சடங்கில் கலந்து கொண்டவர்களை சூழ்ந்து கொட்டியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அங்கிருந்து தப்பியோடினர். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கந்தசாமியால் உடனடியாக அங்கிருந்து வெளியேற முடியவில்லை. இதனால் தேனீக்கள் சூழ்ந்து முகம், கை, கால் என கொட்டியதில் கந்தசாமி மயங்கி விழுந்தார். ஜம்பை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கந்தசாமி உயிரிழந்தார்.
இதுகுறித்து பவானி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.