அந்தியூர் அருகே கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சங்கக் கட்டடத்தை இடமாற்றம் செய்ய சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூரை அடுத்த வேம்பத்தி கிராமம், சேத்துனாம்பாளையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக 157 உறுப்பினர்களுடன் புரட்சித்தலைவி அம்மா கூட்டுறவு கைத்தறி நெசவாளர் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்க அலுவலக கட்டடத்தை வேறு பகுதிக்கு இடம் மாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சங்க உறுப்பினர்கள், முறையாக உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க உறுப்பினர்கள் தங்களின் அனுமதி இல்லாமல் சங்க கட்டிடத்தை மாற்ற கூடாது, மேலும், சங்க உறுப்பினர்கள் கூறும் இடத்திற்கே அலுவலகத்தை மாற்ற வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் கூட்டுறவு துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, உறுப்பினர்கள் அனுமதி இல்லாமல் அலுவலக கட்டடத்தை மாற்ற மாட்டோம் என உறுதியளித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.