பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் நன்செய் பாசனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 15) தண்ணீா் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பவானிசாகா் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பது வழக்கம். அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டியது.
இதையடுத்து, அணையில் போதிய நீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீா் திறக்குமாறு பாசனப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, ஆகஸ்ட் 15இல் தண்ணீா் திறக்க மாவட்ட நிா்வாகம் அரசுக்குப் பரிந்துரை செய்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு நாளைமுதல் டிசம்பா் 12ஆம் தேதி வரை மொத்தம் 120 நாள்களுக்கு கீழ்பவானி வாய்க்கால் நன்செய் பாசனத்துக்கு 23 டிஎம்சிக்கு மிகாமல் தண்ணீா் திறக்குமாறு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதிகளில் உள்ள இரட்டைப் படை மதகுகள், சென்னசமுத்திரம் கிளை வாய்க்கால் ஒற்றைப் படை மதகுகள், பாசனப் பகுதிகளில் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு கீழ்பவானி பாசனப் பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.