ஈரோடு அபிராமி கிட்னிகேர் மருத்துவமனை, ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஈரோடு பெருந்துறை சாலையில் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை, ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக புதிதாக சி.டி.ஸ்கேன் பிரிவு, தோள் பட்டை, மூட்டு வலிகளுக்கு ஆர்த்தோ ஸ்கோப் மூலம் அறுவை சிகிச்சை செய்ய தனி பிரிவும், பொது அறுவை சிகிச்சை, வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு லேப்ராஸ்கோப், எண்டோஸ்கோப் மூலம் அறுவை சிகிச்சை செய்ய தனிப்பிரிவு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
இதன் துவக்க விழா அபிராமி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புதன்கிழமை நடந்தது. விழாவிற்கு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் வரவேற்றார். அபிராமி மகளிர் நல மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பூர்ணிமா சரவணன், டாக்டர்கள் நரேஷ் தனக்கொடி, சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய மருத்துவ சங்க(ஐ.எம்.ஏ) தேசிய துணைத்தலைவர் டாக்டர் சி.என்.ராஜா, டாக்டர் சிதம்பரம் ஆகியோர் பங்கேற்று குத்து விளக்கேற்றினர். பின்னர் அவர்கள் புதிதாக துவங்கப்பட்ட சி.டி.ஸ்கேன் பிரிவு, எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை பிரிவு, பொதுஅறுவை சிகிச்சை பிரிவுகளை பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு ஐ.எம்.ஏ.தலைவர் டாக்டர் பிரசாத், செயலாளர் டாக்டர் செந்தில்வேலு, இந்திய பல் மருத்துவ சங்க நிர்வாகி டாக்டர் உமாசங்கர், டாக்டர்கள் அபிராமி, நர்மதா, காந்திமதி, மனோகர் ஆகியோர் பங்கேற்றனர்.