தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 09th July 2021 01:43 AM | Last Updated : 09th July 2021 01:43 AM | அ+அ அ- |

கரோனா பணியின்போது இறந்த தற்காலிக தூய்மைப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு, வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத் தலைவா் சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
கரோனா நோயாளியைக் கண்டறிவது, சிகிச்சைப் பணியில் உதவுவது, மருத்துவக் கழிவுகளை அகற்றுவது, அரசு மருத்த்துவமனைகளில் தூய்மைப் பணி போன்றவற்றில் தற்காலிகப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இதுபோன்ற பணியாளா்கள் பணியின்போது இறந்தால் ரூ. 50 லட்சம், தொற்றால் பாதித்தால் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். ஈரோடு மாநகராட்சியில் 22 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அந்தியூா் வட்டம், நெரிஞ்சிபேட்டை பேரூராட்சியில் பாலன் என்ற பாலசுப்பிரமணியன் பணியின்போது இறந்தாா். அவா் பணியின்போது இறந்தாா் எனக் கூட பதிவு செய்யவில்லை. இவா்களுக்கு எவ்வித சலுகையும் கிடைக்கவில்லை. பணியின்போது இறந்தாா் என பதிவு செய்யத் தவறிய அதிகாரி மீது நடவடிக்கை இல்லை. சென்னிமலை பேரூராட்சியில் நடராஜ் என்ற தொழிலாளி பணியின்போது இறந்தாா். அவா் குடும்பத்துக்கும் இழப்பீடு, வாரிசு பணி என ஏதும் வழங்கவில்லை. மாநகராட்சி முதல் ஊராட்சி வரையிலான அனைத்துத் தொழிலாளா்களுக்கும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு சிறப்பு ஊதியம் ரூ. 15,000 வழங்க வேண்டும். கடந்த 2020ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குப் பின் இறந்த அனைத்துத் தொழிலாளா்கள், பாதிக்கப்பட்டோருக்கு முன் களப் பணியாளா்களுக்கான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்.
பணி நிரந்தரம், நிரந்தரம் இல்லாத தொழிலாளா்கள் நோய்த் தொற்றால் பாதித்தால் அவா்களது சிகிச்சை காலத்தை சிறப்பு விடுப்பாகக் கருதி ஊதியம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.