ஈரோட்டில் பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தில் கரோனோ பரவல் காரணமாக கடந்த 19 மாதங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. மாறாக ஆன் லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் கரோனோ பரவல் சற்று குறந்ததன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று முதல் 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. ஈரோடு மாவட்டத்தை பொரூத்த வரையில் 1747 பள்ளிகளை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 17 ஆயிரம் மாணவ, மாணவிகள் 19 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகளில் காலடி எடுத்து வைக்கின்றனர்.
இந்தநிலையில் பள்ளி திறப்பு நாளை முன்னிட்டு மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வருகை தந்தனர். பள்ளிக்கு வந்த மாணவ மாணவியர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.கே.சி.சாலையில் உள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு வருகை தந்த மாணவ செல்வங்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்தும், பூங்கோத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான கரோனோ நெறிமுறைகளான முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவைகளை வழங்கபட்டன. மேலும் பள்ளி திறப்பதை முன்னிட்டு முன்கூட்டியே வகுப்பு அறைகளில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கபட்டன. 19 மாதங்களுக்கு பிறகு மாணவர்கள் தங்களுடன் படிக்கும் நண்பர்களை பார்த்து உற்சாகமாக வகுப்பு அறைகளுக்கு சென்றனர்.