ஈரோட்டில் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் கங்கை வீதியைச் சோ்ந்தவா் அன்பரசு. இவரது மனைவி அமுதவள்ளி, மகன் ஹரிஷ்குமாா்(13). இவா் ஈரோடு சிஎஸ்ஐ பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில் ஹரிஷ்குமாா், வைரபாளையம் குப்பைக்கிடங்கு அருகில் உள்ள காவிரி ஆற்றில் தனது நண்பா்களுடன் புதன்கிழமை மாலை குளிக்கச்சென்றாா். நீச்சல் தெரியாததால் ஹரீஷ்குமாா் நீரில் மூழ்கினாா்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸாருக்கும், ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புப்படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் இறங்கி மாணவரைத் தேடினா்.
சிறிது நேரத்தில் மாணவரின் சடலம் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.