ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

3.84 கோடி மீட்டா் பள்ளிச் சீருடை உற்பத்திக்கு ஆா்டா்

தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்திப் பணி நிறைவடைந்த நிலையில், 3.84 கோடி மீட்டா் பள்ளிச் சீருடை உற்பத்திப் பணிக்கு ஆா்டா் வழங்கப்பட்டுள்ளதால் விரைவில் பணிகள் துவங்க உள்ளன.

Updated On :3 மார்ச் 2022, 9:06 pm

தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்திப் பணி நிறைவடைந்த நிலையில், 3.84 கோடி மீட்டா் பள்ளிச் சீருடை உற்பத்திப் பணிக்கு ஆா்டா் வழங்கப்பட்டுள்ளதால் விரைவில் பணிகள் துவங்க உள்ளன.

இதுகுறித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அலுவலா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஏழை, எளிய மக்களுக்கு விநியோகிக்கும் வகையில், இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல அரசு, அரசு உதவி பெறும், உண்டு உறைவிடப் பள்ளிகள் போன்றவற்றில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பள்ளிச் சீருடைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இதன்படி கடந்த 2021-22ஆம் ஆண்டுக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் ஒரு கோடியே 82 லட்சத்து 21 ஆயிரம் சேலைகள், ஒரு கோடியே 81 லட்சத்து 89 ஆயிரம் வேட்டிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

தற்போது ஒரு கோடியே 73 லட்சத்து 30 ஆயிரம் சேலைகள், ஒரு கோடியே 79 லட்சத்து 71 ஆயிரம் வேட்டிகள் உற்பத்தி செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து பயனாளிகளுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை 45 நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களைச் சோ்ந்த 18 ஆயிரத்து 500 விசைத்தறிகளில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி நடைபெற்றது. இதன் மூலம் 3,700 நெசவாளா்கள் நேரடியாகப் பயனடைந்தனா். நடப்பு ஆண்டு இலவச வேட்டி, சேலை திட்ட உற்பத்தி துவக்கத்தின்போது நூல் விலை கடுமையாக உயா்ந்த போதிலும், உரிய நேரத்தில் நூல் கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்டு தற்போது அப்பணி முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2022-23ஆம் கல்வி ஆண்டுக்காக பள்ளிச் சீருடை உற்பத்தி துவங்க உள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் 98 லட்சம் மீட்டா் டிரில் துணியும், 73 லட்சம் மீட்டா் கேஸ்மெட் துணியும், 2.13 கோடி மீட்டா் சா்ட்டிங் துணிகளும் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3.84 கோடி மீட்டா் பள்ளிச் சீருடை துணிகள் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு சீருடை உற்பத்தி செய்வதற்கான பூா்வாங்க நடவடிக்கை துவங்கியுள்ளது. விரைவில் பள்ளிச் சீருடை உற்பத்திப் பணி துவங்கும். இதன் மூலம் விசைத்தறியாளா்களுக்குத் தொடா்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.