தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மாதேஸ்வரன்(45). இவரது மனைவி மங்கம்மாள்(36). திருமணமாகி 20 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லாததால், டெஸ்ட் ட்யூப் முறையில் முயற்சி மேற்கொண்டனர். இதில் கருவுற்ற மங்கம்மாளுக்கு ஐந்தரை மாதத்திலேயே குறை பிரசவம் ஏற்பட்டு 600 கிராம் எடையுடன் பெண் குழந்தை பிறந்தது.
நுரையீரல் வளர்ச்சி பெறாமல் ஆபத்தான நிலையில் இருந்த சிசுவினை இன்குபேட்டரில் வைத்து பராமரித்த மருத்துவர்கள் நுரையீரல் அழுத்தத்தை நீக்க நைட்ரிக் ஆக்சைடு வாயு செலுத்தி நவீன முறையிலான சிகிச்சையை கையாண்டனர். சமூக வலைதளத்தின் மூலம் பொதுமக்கள் பங்களிப்பாக 3 லட்சம் ரூபாய் நிதி திரட்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க | ஏற்றுமதியில் சாதனை: மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்
ஏறத்தாழ இரண்டு மாதங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த குழந்தையின் எடை 1 கிலோ 750 கிராமாக அதிகரித்தது. இயல்பு நிலைக்கு குழந்தை வந்ததால், மருத்துவர்கள் தாயிடம் குழந்தையை ஒப்படைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
20 ஆண்டுகள் குழந்தை இல்லாத நிலையில், குறை பிரசவத்தில் பிறந்து பொது மக்களிடம் நிதிதிரட்டப்பட்டு மருத்துவர்களால் காப்பாற்றப்பட்ட குழந்தையை பெற்றுகொண்ட கூலி தொழிலாளி தம்பதியினர் நன்றி தெரிவித்தனர்.
இது தொடர்பாக குழந்தைகள் சிறப்பு மருத்துவர் பூபதி கூறும்போது, "குறைந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளை காப்பாற்ற பெருநகரங்களில் மட்டுமே இருந்த வசதி தற்போது ஈரோடு போன்ற சிறுநகரங்களிலும் உள்ளது. குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பின்னாளில் பாதிப்பு ஏற்படும் என்பது உண்மையில்லை என்பதால் பொதுமக்கள் அச்சபட தேவையில்லை" என்றார்.