சத்தியமங்கலம்: யானை தாக்கி விவசாயி பலியான சம்பவத்தில் ஆட்கொல்லியானையை பிடித்து வேறு இடத்தில் விடக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அடுத்த தர்மாபுரத்தில் வாழைத்தோட்டத்தை சேதப்படுத்திய ஒற்றை யானையை விரட்டிய விவசாயி மல்லப்பாவை யானை தாக்கி கொன்றது.
கடந்த ஒராண்டுகளாக இந்த ஒற்றையானை விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் இரு மாதங்களுக்கு முன்பு திகினாரையில் இரவு நேர காவலில் இருந்த விவசாயியை யானை தாக்கி கொன்றதாவும் ஆட்கொல்லி யானையை பிடித்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக்கோரி தாளவாடி, தொட்டகாசனூர், தர்மாபுரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொங்ஹள்ளி தர்மாபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
ஒற்றையானையால் விவசாயிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், விவசாயிகளுக்கும் பயிர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதை வனத்துறை உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால் தாளவாடி-கொங்கல்லி இடையே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தின் இணை கள இயக்குநர் தேவேந்திர மீனாகுமார் விவசாயிகளை சமாதானப்படுத்தினர்.
ஒற்றை யானையை பிடித்து வேறு இடத்துக்கு மாற்ற கும்கி யானை வரவழைக்கப்படும் என உறுதியளித்தையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.