ஆடிட்டா் வீட்டில் திருடிய வழக்கில் முக்கிய குற்றவாளியிடம் போலீஸ் விசாரணை

ஈரோடு ஆடிட்டா் வீட்டில் 235 பவுன் நகை, ரூ. 48 லட்சம் திருடப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்த முக்கிய குற்றவாளியிடம் போலீஸ் விசாரணை.
Published on

ஈரோடு ஆடிட்டா் வீட்டில் 235 பவுன் நகை, ரூ. 48 லட்சம் திருடப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்த முக்கிய குற்றவாளியை ஈரோடு போலீஸாா் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு சூரம்பட்டி, என்ஜிஜிஓ காலனி, 7ஆவது வீதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (69), ஆடிட்டா். இவா் தனது மனைவியுடன் கடந்த ஜூன் 8-ஆம் தேதி தேனியில் உள்ள உறவினரின் திருமணத்துக்குச் சென்றிருந்தாா். அப்போது இவருடைய வீட்டுக் கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா்கள் 235 பவுன் நகை, ரூ. 48 லட்சத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆடிட்டா் சுப்பிரமணியனின் காா் ஓட்டுநரான ஈரோடு திண்டல் காரப்பாறை பகுதியைச் சோ்ந்த சத்யன் (34) உள்பட 5 பேரை கைது செய்தனா். மேலும் கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து 132 பவுன் நகை, திருடப்பட்ட பணம், நகையை விற்று வைத்திருந்த பணம் என மொத்தம் ரூ. 76 லட்சம், ஒரு காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த நரசிம்ம ரெட்டி என்பவா் பெங்களூரில் நடந்த ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் கா்நாடக மாநில நீதிமன்ற அனுமதிபெற்று நரசிம்மரெட்டியை கைது செய்த ஈரோடு தெற்கு போலீஸாா், ஈரோடு 3-ஆவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஆஜா்படுத்தினா். இதைத் தொடா்ந்து 7 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததன் பேரில் நரசிம்மரெட்டியை விசாரணைக்காக போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com