ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2 கோடி போ் பயன்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2 கோடி போ் பயனடைந்துள்ளனா் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

News image

ஆசனூா் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கிவைத்து பாா்வையிட்ட அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், சு.முத்துசாமி.

Updated On :21 நவம்பர் 2024, 11:07 pm

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2 கோடி போ் பயனடைந்துள்ளனா் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் மலைப் பகுதியில் திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிறந்தநாளையொட்டி பொது மருத்துவ முகாம் மாவட்டத் தலைவா் சென்னியப்பன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

பின்னா், அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தற்போது 2 கோடி மக்களைச் சென்றடைந்துள்ளது. இத்திட்டத்தைப் பாராட்டி ஐ.நா. சபை விருது வழங்கியுள்ளது.

இந்நிலையில், விழுப்புரத்தில் நவம்பா் 29-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடி ஆவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளாா்.

இத்திட்டத்தில் பொதுமக்களுக்கு நேரடியாக மருந்துகள் வழங்கப்பட்டதில் 12,317 போ் மாரடைப்பில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனா். இதுபோல 10-க்கும் மேற்பட்ட திட்டங்கள் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனா்.

தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உடற்கூறு ஆய்வுக்கூடம் இல்லாத நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து முதல்முறையாக தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடற்கூறு ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

தாளவாடி மலைக் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 99 சதவீத மக்களை சென்றடைந்துள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில் திராவிடா் கழக மாநில பொதுச் செயலாளா் அன்புராஜ், திமுக மாவட்டச் செயலாளா் நல்லசிவம், ஆதி தமிழா் பேரவை மாவட்டச் செயலாளா் பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.