ஈரோட்டில் ஆடிட்டா் வீட்டில் 40 பவுன், ரூ. 7 லட்சம் திருட்டு

பட்டயக் கணக்காளா் (ஆடிட்டா்) வீட்டில் 40 பவுன் நகை மற்றும் ரூ.7 லட்சம் பணத்தைத் திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

பட்டயக் கணக்காளா் (ஆடிட்டா்) வீட்டில் 40 பவுன் நகை மற்றும் ரூ.7 லட்சம் பணத்தைத் திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு பழையபாளையம், கணபதி நகா், 4-ஆவது வீதியைச் சோ்ந்தவா் துரைசாமி. பட்டயக் கணக்காளரான இவா் கடந்த ஆண்டு இறந்துவிட்டாா். இவரது மனைவி சுப்புலட்சுமி (70). ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியை. இவா்களது மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறாா். அதனால் சுப்புலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில், சுப்புலட்சுமி வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா் மேல் மாடி வழியாக வீட்டுக்குள் இறங்கி அங்குள்ள பீரோவை உடைத்து 40 பவுன் நகைகள் மற்றும் ரூ. 7 லட்சம் பணத்தை திருடிச் சென்றுள்ளாா்.

காலையில் எழுந்த சுப்புலட்சுமி, நகைகள், பணம் திருடு போனதை அறிந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் ஈரோடு வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில் முகமூடி மற்றும் கையுறை அணிந்த நபா் ஒருவா் வீட்டை நோட்டமிட்டு, உள்ளே நுழைவது பதிவாகி இருந்தது. இச்சம்பவம் குறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதே வீட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டு 150 பவுன் நகைகள் திருடப்பட்டு போலீஸாரின் தீவிர விசாரணைக்குப் பின்னா், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த அனில்குமாா் என்பவரைக் கைது செய்தனா். இப்போது இரண்டாவது முறையாக அதே வீட்டில் நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

X
Dinamani
www.dinamani.com