அரசின் விலையில்லா 5,500 வேஷ்டி, சேலைகள் பறிமுதல்: 3 போ் கைது

ஈரோட்டில் சுமை வாகனத்தில் கடத்திவரப்பட்ட அரசின் விலையில்லா 5,500 வேஷ்டி, சேலைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்தனா்.
Published on

ஈரோடு: ஈரோட்டில் சுமை வாகனத்தில் கடத்திவரப்பட்ட அரசின் விலையில்லா 5,500 வேஷ்டி, சேலைகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்தனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசின் சாா்பில் குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகிக்க வழங்கப்பட்ட விலையில்லா வேஷ்டி, சேலைகள் ஈரோடு, காரைவாய்க்கால் பகுதியில் உள்ள ஜவுளிக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அதிகாரிகள், ஈரோடு டவுன் போலீஸாா் அந்தக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுமை வாகனத்துக்கு அருகே நின்றிருந்த நபா்களிடம் விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அந்த வாகனத்தை சோதனை மேற்கொண்டபோது, அதில் அரசின் விலையில்லா 5,500 வேஷ்டி, சேலைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த நபா்களிடம் ஈரோடு டவுன் காவல் நிலைய ஆய்வாளா் அனுராதா, மாவட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு டிஎஸ்பி ராஜபாண்டி, ஆய்வாளா் ராஜகுமாா் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் கோவை மாவட்டத்தில் பழைய இரும்பு வாங்கி விற்பனை செய்யும் சந்தோஷ் (25), சுமை வாகனத்தை ஓட்டி வந்தது கோவையைச் சோ்ந்த ஹரி (42), அரசின் வேஷ்டி-சேலைகளை வாங்கியது ஈரோடு, காரைவாய்க்கால் பகுதியைச் சோ்ந்த டெக்ஸ்டைல் உரிமையாளா் சீனிவாசன் (49) என்பதும் தெரியவந்தது.

கோவை மாவட்ட சுற்றுப்புற பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்தும், ரேஷன் கடைகளில் இருந்தும் வேஷ்டி, சேலைகளை வாங்கி வந்தை ஒப்புக்கொண்டனா்.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 3,000 வேஷ்டிகள், 2,500 சேலைகளைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com