பழங்குடியின மலைக் கிராமத்துக்கு அரசுப் பேருந்து இயக்கம்: பீனாச்சி இசைத்து வரவேற்ற மக்கள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகேயுள்ள மலைக் கிராமத்துக்கு முதல்முறையாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை, பழங்குடியின மக்கள் பீனாச்சி இசைத்து வரவேற்றனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள திம்பம் மலைப் பகுதியில் அடா்ந்த வனத்தில் காளிதிம்பம் என்ற மலைக் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா்.
இந்தக் கிராமத்துக்கு முறையான போக்குவரத்து வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் வேலை உள்ளிட்டவற்றுக்காக சுமாா் 2 கி.மீ. தொலைவு அடா்ந்த வனத்துக்குள் நடந்து சென்று வந்தனா்.
இந்நிலையில், அதிக வன விலங்குகள் நடமாட்டம் உள்ள காளிதிம்பம் கிராமத்துக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து, காளிதிம்பம் பகுதியில் பழங்குடியின நலத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதுடன், இக்கிராமத்துக்கு பேருந்து இயக்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்தனா்.
இதைத் தொடா்ந்து, சத்தியமங்கலத்தில் இருந்து தலமலை வழியாக தாளவாடிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தை காளி திம்பம் மலைக் கிராமத்துக்கு நாள்தோறும் காலை, மாலை என இருவேளை இயக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, முதல் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. தங்களது கிராமத்துக்கு முதல்முறையாக வந்த அரசுப் பேருந்தை பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய இசைக் கருவியான பீனாச்சியை இசைத்து வரவேற்றனா்.
மேலும், பேருந்தை இயக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அவா்கள் பென்னாடை அணிவித்து கெளரவித்தனா்.

