சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்
திம்பம் மலைப் பாதையில் சாலையோரத்தில் படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை உள்ளது. இந்த மலைப் பாதையில் இரவு நேரங்களில் வன விலங்குகள் உலவுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், திம்பம் மலைப் பாதை 12-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவா் மீது சிறுத்தை ஒன்று திங்கள்கிழமை அதிகாலை படுத்திருந்தது. இதைப் பாா்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
இருப்பினும் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் சிறிது நேரம் அங்கேயே படுத்திருந்த சிறுத்தை, பின் வனத்துக்குள் சென்றது.
திம்பம் மலைப் பாதையில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகாரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வேண்டும், விலங்குகளின் அருகில் செல்லவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ, வாகனத்தில் இருந்து கீழே இறங்கவோ முயற்சி செய்யக்கூடாது என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

