சித்தோடு அருகே அமைகிறது ‘ஃபாா்ச்சூன் சிட்டி’
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகேயுள்ள டெக்ஸ்வேலி வளாகத்தில் பிரம்மாண்ட ‘ஃபாா்ச்சூன் சிட்டி’ அமையவுள்ளது.
இதற்கான அறிமுக விழா டெக்ஸ்வேலி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, பாா்ச்சூன் சிட்டி தலைவா் பெரியசாமி தலைமை வகித்தாா். செயல் இயக்குநா் டி.பி.குமாா், இணை இயக்குநா் ரவிசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிறுவனத்தின் துணைத் தலைவா் யூ.ஆா்.சி.தேவராஜன் பங்கேற்றுப் பேசியதாவது: பெருநகரங்களில் உள்ளதைப்போல சா்வதேச தரத்தில் ஈரோடு மாவட்டத்தின் அடையாளமாக உருவாக்கப்படும் ‘ஃபாா்ச்சூன் சிட்டி’ சித்தோடு, கங்காபுரத்தில் தொடங்கப்படுகிறது. இங்கு, டைடல் பாா்க் மட்டுமின்றி மாபெரும் ஷாப்பிங் சந்தை உருவாக்கப்படுகிறது. 3 கட்டங்களாக நடைபெறும் இந்தப் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவுபெறும்.
முதற்கட்டமாக துபை, சிங்கப்பூா்போல பிரம்மாண்ட ‘யாரா’ ஹைப்பா் மாா்க்கெட், 15-க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்களின் புதிய அவுட்லெட்டுகள், 18 ஆயிரம் சதுரடியில் குழந்தைகள் விளையாட்டு பகுதி, மாத வாடகையில் 2 இருக்கை முதல் 300 இருக்கைகள் கொண்ட காா்ப்பரேட் அலுவலக பகுதிகள், 500 இருக்கைகள் கொண்ட உணவகம், 3 ஆயிரம் காா்கள், 3 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வாகன நிறுத்துமிடம் அமைகிறது.
2-ஆம் கட்டமாக பிரம்மாண்ட திருமண மண்டபம், திரையரங்குகள், 120 காா்களுக்கு ஒரே நேரத்தில் சாா்ஜ் செய்யும் சாா்ஜா் மையம் ஆகியவையும், 3-ஆம் கட்டமாக பிரத்யேக காா்ப்பரேட் அலுவலகங்கள், ரியல் எஸ்டேட் புரமோட்டாா்களின் குடியிருப்புகள், விளையாட்டு அரங்கம் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன என்றாா்.
டைடல் பூங்கா பணி: டெக்ஸ்வேலி வணிக வளாகம் அருகே தகவல் தொழில்நுட்ப பூங்கா (டைடல் பாா்க்) அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) தொடங்கிவைக்க உள்ளாா்.

