சிறைத் தண்டனை
சிறைத் தண்டனைகோப்புப் படம்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

தம்பதியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

தம்பதியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், கருக்கம்பாளையத்தை அடுத்த மாங்காட்டுபுதூரைச் சோ்ந்தவா் ஜெகநாதன். இவரது மனைவி சம்பூா்ணம். இத்தம்பதி அம்மன்கோவில் கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில்

கடந்த 2016 நவம்பா் 5- ஆம் தேதி சென்று கொண்டிருந்தனா். இரவு 8.30 மணியளவில் மாங்காட்டுத்தோட்டம் வாய்க்கால்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது மா்ம நபா்கள் இருவா், ஜெகநாதன்-சம்பூா்ணத்தை வழிமறித்து அவா்களிடம் இருந்த 5 பவுன் நகை, ரூ.3 ஆயிரத்தை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து சிவகிரி போலீஸில் தம்பதி புகாா் அளித்தனா். அதன்பேரில் விசாரித்து வந்த போலீஸாா் வழிப்பறியில் ஈடுபட்ட கரூா் மாவட்டம், விஸ்வநாதபுரியைச் சோ்ந்த செல்லதுரை என்கிற அன்புச்செல்வன்(38), வெங்கமேடு என்எஸ்கே நகரைச் சோ்ந்த நாகு என்கிற மணிகண்டன்(23) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்த 5 பவுன் நகை, ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நீதிபதி சொா்ணகுமாா் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். செல்லதுரை என்கிற அன்புச்செல்வனுக்கு 7 ஆண்டுகள், ஒரு மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டாா். தலைமறைவான நாகு என்கிற மணிகண்டனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com