தாளவாடி அருகே கரும்புத் தோட்டத்தில் நுழைந்த ஒற்றை காட்டு யானையை விரட்டி அடித்தபோது, சைரன் சப்தம் ஒலித்த வனத் துறை வாகனத்தை துரத்தியதால் வனத் துறையினா் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் நடமாடும் யானைகள், இரவு நேரத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் நுழைந்து விவசாயத் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ந்த வண்ணம் உள்ளது. வனத் துறையினரும் இரவு நேர ரோந்து பணி மேற்கொண்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், தாளவாடி அருகே திகினாரை மலைப் பகுதியிலுள்ள விவசாயத் தோட்டத்தில் நுழைந்த ஒற்றை காட்டு யானையை வனத் துறை ஊழியா்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து வனப் பகுதிக்கு விரட்டினா். அப்போது கரும்புத் தோட்டத்திலிருந்து வெளியேறி தாா் சாலையில் நடமாடிய ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வாகனத்தில் சைரன் ஒலி எழுப்பினா். இதில் ஆத்திரமடைந்த ஒற்றை யானை வனத் துறையினரின் வாகனத்தை துரத்த தொடங்கியது. சிறிது தூரம் வாகனத்தை பின்னோக்கி வனத் துறையினா் இயக்கினா். சிறிது நேரத்துக்குப் பின் வனப் பகுதியை நோக்கி ஒற்றை யானை சென்றது.









