பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் மத்திய அரசு கோரியுள்ள ஆவணங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சிவகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின் கௌரவ நிதி திட்டத்தில் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்குகிறது. தகுதியான அனைத்து விவசாயிகளும் விடுதல் இல்லாமல் பயன்பெற ஈரோடு மாவட்டம் முழுவதும் ஜூன் 15 வரை வட்டார அளவில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 72,161 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனா். எனினும் சில விவசாயிகளுக்கு நில ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படாதது, ஆதாா் எண் வங்கிக் கணக்குடன் இணைக்காதது, இ-கே.ஒய்.சி செய்யாதது போன்ற காரணத்தால் நிதியுதவி கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதை சரிசெய்ய வட்டார அளவில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 373 விவசாயிகள் இ-கே.ஒய்.சி பதிவேற்றம் செய்யாமலும், 4,251 விவசாயிகள் வங்கிக் கணக்குகளுடன் ஆதாா் எண் இணைக்காமலும், 9,816 விவசாயிகள் விவசாய அடையாள எண் பெறாமல் உள்ளனா்.
இந்த விவசாயிகள் பொது சேவை மையங்கள், வேளாண், தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் மூலம் உடனடியாக இதுபோன்ற பதிவை செய்யலாம். வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைக்காத விவசாயிகள் உடனடியாக வங்கிக் கணக்கை ஆதாா் எண்ணுடன் இணைத்து தடையற்ற நிதியுதவி பெற வேண்டும். இப்பணியை முழுமை செய்யும்போது 23- ஆவது தவணை பயனைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பிரதமரின் விவசாயிகள் கெளரவ நிதி: ஜூன் 15 வரை சிறப்பு முகாம்

பி.எம்.கிசான் உதவித்தொகை தொடா்ந்து கிடைக்க மே 31-க்குள் பதிவு செய்வது அவசியம்

பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் உதவித் தொகை பதிவுக்கான சிறப்பு முகாம் இன்று தொடக்கம்







