மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதியில் மேராக்காய் மகசூல் அதிகரிப்பால் அதன் விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதில் குறைந்த முதலீட்டில் கூடுதல் வருமானம் கிடைக்கும் மேராக்காய் விவசாயத்தை மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். விவசாய இடுபொருள்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் கடன் வாங்கி இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காலநிலை மாற்றத்தால் மேராக்காய் மகசூல் அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ மேராக்காய் ரூ. 3 முதல் ரூ. 4-க்கு மட்டுமே விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து விவசாயி ராஜ்குமார் கூறியதாவது:
கால நிலை மாற்றத்தால் மேராக்காய் விவசாயம் அதிகரித்துள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் உறை பனியால் கொடிகள் காய்ந்து கருகும் நிலை ஏற்படும் என்பதால் தற்போது காய்களை அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மகசூல் அதிகரித்துள்ளால் தற்போது காய்கறி மண்டிகளில் விலை குறைத்து வழங்கப்படுகிறது. கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட காய்கறி மண்டிகளில் ஒரு கிலோ சாதாரண மேராக்காய் ரூ. 3 முதல் ரூ. 4 வரையிலும், உயர் ரக மேராக்காய் ரூ. 5 முதல் ரூ. 7-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ.10 வரை விலை கிடைத்தால் மட்டுமே எங்களுக்கு அசல் தொகை கிடைக்கும். ஆனால் குறைந்த விலை கிடைப்பதால் விவசாயிகள் பெரும் பொருளதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.