உதகையில் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் காலை 10 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தலைவர் வருகையின்போது, சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை. காவல் துறை. ஊரக வளர்ச்சித் துறை. சுகாதார துறை. நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட 19 துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 171 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
நீலகிரியின் பூர்வீக குடிமக்களான தோடர், கோரக்கர் மற்றும் படகர் சமுதாய மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் சிலம்பாட்ட சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் படகர் சமுதாய நடனத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் பெண் அரசு அலுவலர்களும் பங்கேற்று நடனமாடினர்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக காவல்துறை உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெறவில்லை. அதேபோல பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.