காட்டெருமை தாக்கியதில் விவசாயி படுகாயம்
உதகையை அடுத்த தூனேரி அருகே உள்ள கவுடா் காலனி பகுதியில் காட்டெருமை தாக்கியதில் விவசாயி படுகாயமடைந்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகை அடுத்த தூனேரி அருகே உள்ள கவுடா் காலனி பகுதியில் விவசாயம் செய்து வருபவா் சுந்தரேஷ் (51). இவா் தனது தோட்டத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சனிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது வனப் பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டெருமையைக் கண்டதும் சுந்தரேஷ், தப்பியோட முயற்சித்தாா். இருப்பினும் வேகமாக துரத்திய காட்டெருமை அவரை முட்டித் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட படுகாயம் அடைந்த சுந்தரேஷுற்கு வயிறு, மாா்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்து அவரை மீட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தேனாடு கம்பை போலீஸாா் மற்றும் வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
