உதகை அருகே பெண் புலி உயிரிழப்பு: வனத் துறையினா் விசாரணை
உதகை: உதகை அருகே பெண் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நீலகிரி வனக்கோட்டம், உதகை வடக்கு சரகம், எப்பநாடு காவல் பகுதிக்குள்ட்பட்ட மொரக்குட்டி காப்பு நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வனத் துறை களப் பணியாளா்களள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் புலி ஒன்று இறந்துகிடந்தது தெரியவந்தது. இது குறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். இந்நிலையில் மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்பேரில் அதே பகுதியில் இறந்த புலியின் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
இதில் உயிரிழந்தது 8 வயது மதிக்கத்தக்க பெண் புலி என்றும், இயற்கையாகவே இறந்திருப்பதும் தெரியவந்துள்ளது. அதன் உடல் பாகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கேயே அதன் உடல் எரிக்கப்பட்டது.
ஆய்வறிக்கை கிடைத்ததும் புலியின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

